திமுக ஆட்சியில் குற்றங்களை தடுக்கும் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாடியுள்ளார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதை பொருட்களின் கூடாரம் என்று கடந்த 15 மாத விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை நான் சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், செய்தியாளர்கள் பேட்டியிலும் பலமுறை சுட்டிக்காட்டியும், முதலமைச்சரோ, மூத்த அதிகாரிகளோ, காவல் துறையோ எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. சமூக விரோதிகளும், கொடுஞ்செயல் புரிவோரும் பல்வேறு குற்றங்களை புரிந்து, மக்களை மிரட்டி வருகிறார்கள்.
சிறைச்சாலை என்பது குற்றம் புரிந்தவர்களை பக்குவப்படுத்தி சீர்திருத்தும் இடம். ஆனால் அங்கு தண்டனை பெற்ற கைதிகளுக்கு செல்போன்கள், பேட்டரிகள், ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் போன்றவை எப்படி கிடைக்கிறது என்றே தெரியவில்லை.
சென்னை எண்ணூரை சேர்ந்த ரவுடி வழக்கு ஒன்றில் சிக்கி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சிறையின் உதவி ஜெயிலர் திடீர் சோதனை நடத்தும் போது செல்போன் மற்றும் பேட்டரிகளை எண்ணூர் ரவுடியிடமிருந்து பறிமுதல் செய்திருக்கிறார். இதனால் கடந்த 27ம் தேதி அவரின் வீட்டிற்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார்கள். ஆனால் நல்லவாய்ப்பாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை. நேர்மையான முறையில் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரியை அச்சமூட்டும் வகையில் அவரது வீடு தாக்கப்படும் சம்பவம் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதேபோல் மதுரை மத்திய சிறையில் 62 வயது கைதி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லை, சிறையில் உள்ள ஒருசில கைதிகளுக்கும் பாதுகாப்பில்லை, கைதிகளை திருத்தப் போராடும் நேர்மையான காவலர்களுக்கும் பாதுகாப்பில்லை. தற்போது பட்டப் பகலில் கூட வீதிகளில் நடமாட முடியாமல் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
மக்களை காக்க திறமையில்லாமல், மக்களை பாதுகாக்கும் பணியில் உள்ள காவலர்களையும், காக்கத் தவறிய இந்த ஆட்சியாளர்கள், கும்பகர்கண தூக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும். இல்லையென்றால் திமுக அரசை விழித்தெழ வைக்கும் அறப்போரில் அதிமுக ஈடுபடும் என தெரிவித்துள்ளார்.