நாட்டில் 20 கோடி பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO)…

இந்தியாவில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவை பாதிக்கும் மிகப்பெரிய சுகாதார பிரச்னைகளில் உயர் ரத்த அழுத்தமும் ஒன்று. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு, தொற்று இல்லாத நோய்களால் ஏற்படுகிறது. இதில், முதலிடம் வகிப்பது இதய நோய்கள். இவற்றுக்கு முக்கியக் காரணம் கட்டுப்பாடு இல்லாத உயர் ரத்த அழுத்தம் தான் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து பல்வேறு விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.அந்த வகையில்,  உயர் ரத்த அழுத்த பாதிப்பு மற்றும் அதன் சிகிச்சை பெறுவது குறித்து இந்திய உயர் ரத்த அழுத்த கட்டுப்பாட்டு செயலாக்கம் (Indian Hypertension Control Initiative) என்ற பெயரில் ஐசிஎம்ஆர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு 5 மாநிலங்களில் மட்டுமே ஆய்வு செய்த நிலையில், 2022ம் ஆண்டு ஆந்திரா, தமிழ்நாடு, உள்ளிட்ட 21 மாநிலங்களில் 104 மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 20 கோடி மக்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 2 சதவீதம் மக்கள் மட்டுமே முறையாக சிகிச்சை பெற்று உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்கள் : அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது ‘Good Bad Ugly’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவிப்பு!

மத்திய அரசு, தொற்று இல்லாத நோய்களால் ஏற்படுத்தும் இறப்பை 2025ம் ஆண்டிற்குள் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமாக உயர் ரத்த அழுத்த நோய் இறப்பை குறைப்பது மிகவும் முக்கியமானது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மேலும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, ஒரு நாளுக்கு 5 கிராம் உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும், பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்க்க வேண்டும், பேக்கரி உணவை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்,காஃபினேட் உள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், வாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயற்சி செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.