சென்னை விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் செல்போன் பேசி கொண்டு சென்று கொண்டிருந்த போது விரைவு ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஷாலினி. இவர்
கல்லூரி படிப்பை முடித்து விட்டு ஆவடி அருகே உள்ள ப்யூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இவர் தினமும் ரயிலில் ஆவடி சென்று பணி முடித்து இரவு வீடு திரும்புவது வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்து விட்டு ஆவடியில் இருந்து மின்சார
ரயில் பயணம் செய்து விம்கோநகர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கிய நிலையில் தனது
அண்ணனுடன் செல்போன் பேசி கொண்டு ரயில் தண்டவாளத்தின் ஒரமாக நடந்து சென்று
கொண்டிருந்தார். அப்போது விரைவு ரயில் எதிர்பாரத விதமாக மோதியது. உடலில் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.
ஷாலினியின் குடும்பத்தார் வெகு நேரமாகியும் அவர் செல்போன் எடுக்காததால் விம்கோ ரயில் நிலையம் அருகே தேடி பார்த்த போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கும்படி
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு பின் மருத்துவர்கள் ஷாலினியை பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.