தேர்தல் பரப்புரையின்போது வெறுப்பு பேச்சு பேசும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின் போது எப்போதும் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறுவதாகும். எனவே தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடாமல் தகுதி நீக்கம் செய்யவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்காமல் நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினர். இவ்வாறு நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்யக் கூடாது என அறிவுறுத்தி, மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.







