அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் சேவை செய்யும் என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதில் சிதம்பரம் பகுதியில் ஒரே நாளில் 30 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மழையால் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, காட்டுமன்னார்கோவில், சி.தண்டேஸ்வர நல்லூர், திருநாரையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது.
மேலும் கனமழையால் 6000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியது. மேலும் 242 கூரை வீடுகளும், 29 ஓட்டு வீடுகளும் என மொத்தம் 271 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. இது தவிர 108 கால்நடைகள் மழையால் இறந்துள்ளன. 43 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் சேவை செய்யும் என்றார். டெல்டா பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை அதிமுக அரசு செய்து கொடுத்தது. அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்காகத் துவங்கப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடக்கி வருவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.