மதுரையில் இளைஞரை வீட்டு வாசலில் வைத்து கொடூரமாக வெட்டிய விவகாரத்தில் 6 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியைச் சேர்ந்த வீரய்யா என்பவருடைய மகன் 21 வயதான பிரகாஷ். இவர் பழங்காநத்தம் பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பிரகாஷ் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சிறார்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாஷ் சிறார்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பிரகாசை அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆறு சிறார்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
மேலும் அவரை தடுக்க வந்த பிரகாஷின் சித்தி வாசுகி அம்மாளையும் காலில் வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பிரகாசை மீட்ட உறவினர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷின் தந்தையார் வீரய்யா அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஆறு சிறார்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஆறு சிறார்கள் வாலிபரை கொடூரமாக வெட்டி கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.