வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு கிடையாது எனவும், பிஜு ஜனதா தளத்தின் எதிர்க்காலத் தலைவரை ஒடிசா மக்களே முடிவு செய்வார்கள் எனவும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசு வி.கே.பாண்டியன் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஒடிசாவில், பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பணி அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய வி.கே.பாண்டியனைப் பற்றி அதிக விமர்சனங்கள் எழுப்பப்பட்டிருக்கும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நவீன் பட்நாயக்கிடம் ஒரு நேர்காணலில், உங்களுடன் நெருங்கிய நபராக இருக்கும் வி.கே. பாண்டியன், ஒரு கேட் கீப்பர் போல செயல்படுவதாகவும், பாண்டியன்தான் உங்கள் அரசியல் வாரிசா, நீங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பதாகவும் கூறப்படுகிறதே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த நவீன் பட்நாயக், “இது மிகவும் மோசமான விஷயம், இதற்கு முன்பே நான் பல முறை பதிலளித்துள்ளேன். இது பல காலமாகக் கூறப்படும் குற்றச்சாட்டு. இதற்கு இப்போது எந்த அர்த்தமும் கிடையாது. எனது அரசியல் வாரிசு என்று பாண்டியனை கூறுவது மிகைப்படுத்தப்பட்டது. துரதிருஷ்டவசமானது. என்னால், இந்த மிகைப்படுத்துதலை புரிந்துகொள்ளமுடியவில்லை.
ஒடிசாவிலும், தேசிய அளவிலும், பாஜக தனது செல்வாக்கை இழந்து வருகிறது. அதுனால்தான், எதிர்க்கட்சிகள் குறித்து இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகிறது. நாடு முழுவதும் அவர்கள் செல்வாக்கை இழந்து வருவதால் பாஜகவினர் விரக்தியில் இருக்கிறார்கள். அரசியல் வாரிசு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒரு அரசியல் கட்சியைப் பொறுத்தவரை, மக்கள்தான் அதனை முடிவு செய்வார்கள்.
நான் இது குறித்து பல முறை சொல்லிவிட்டேன். பிஜு ஜனதா தளத்தின் அடுத்த தலைவரை மாநில மக்களே தேர்வு செய்வார்கள். அதுதான் இயற்கையான வழியாக இருக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். எனக்கு இக்கட்சியின் தலைமைப் பதவி 27 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதனை நான் தற்போது வரை சிறப்பாக நடத்தி வருகிறேன். அதையே தொடர்வேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.