பிரதமர் மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கில் சம்மன் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சர்வாதிகாரிகள் வழக்கம் போல் செய்யும் முயற்சி தான் நாளை நடைபெற உள்ள விசாரணை என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மோடியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து ராகுல் காந்தி நட்சத்திரமாக ஆட்சியை கைப்பற்றுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். நாளை காலை 9 மணிக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கதுறை அலுவலகத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
ஒரு கட்சி தன்னுடைய பத்திரிகையை காப்பாற்றுவது கடைமை என தெரிவித்த அவர், நேஷனல் ஹெரால்டின் சொத்துக்கள் யாருடைய கைக்கும் செல்லவில்லை என்றும் ஒரு பைசா கூட பண பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறினார். பண பரிமாற்றம் நடைபெறாத இடத்தில் தவறு நடந்ததாக குற்றம்சாட்டுகிறார்கள் என்றார்.
சுப்பிரமணிய சாமி இல்லாத பிரச்சனையை எப்போதும் பெரிது படுத்துபவர். காங்கிரஸ் கட்சி இதனை எதிர்த்து நிற்கும், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தூய்மையாக இருக்கிறது என அவர் கூறினார். காங்கிரஸ் கட்சி கடன் கொடுத்தது தவறு கிடையாது என்றும் சட்டத்தின் சந்து பொந்தில் நுழைந்து தவறான பிரச்சாரத்தை மோடி அரசு செய்ய முயற்சி செய்கிறது என்றும் சாடினார். பிரதமர் மோடி அரசின் பொருளாதார தொழிற்கொள்கைகள் தோல்வி அடைந்துவிட்டதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினார்.
மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் அழுத்தத்தின் காரணமாகவே அமலாக்க துறை விசாரணை மேற்கொள்ள உள்ளது. பண பரிமாற்றமே இல்லை வெறும் காகிதங்கள் பரிமாற்றம் தான் எனவே நீதிமன்றம் விசாரிக்கலாம், ஆனால் அமலாக்க துறை விசாரணை தவறு, அமலாக்க துறை விசாரிக்க இதில் வேலை இல்லை என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்