தனியார் பள்ளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
பள்ளிக் கல்வித் துறை ஆணையருடன், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற கலவரம் குறித்து புகார் அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மாநிலம் முழுவதும் உள்ள 25,000 தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும். கடும் நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உறுதி அளித்தார்.
60% தனியார் பள்ளிகள் இன்று இயங்கவில்லை. 40% பள்ளிகள் அதிகாரிகளின் மிரட்டலால் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டம் போல், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த தனி சட்டம் கொண்டுவர வேண்டும்.
ஸ்டிரைக்கை வாபஸ் பெறுவது குறித்து மாலை அமைச்சரிடம் கலந்தாலோசித்த பின் முடிவு எடுப்போம் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி அந்த மாணவியின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இளைஞர்களும், பொதுமக்களும் அந்தப் பள்ளி வளாகம் முன் திரண்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதிரடிப் படையினர் கலவரத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து பள்ளியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.