வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி
பட்டியல் இன மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில்
மனிதக்கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார் கடந்த நான்கு மாதங்களாக விசாரணை செய்து வந்த நிலையில்
அவர்கள் 147 நபர்களிடம் இதுவரை விசாரணை செய்து சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகள் நான்கு மாதங்கள் ஆகிய கைது செய்யப்படாத சம்பவம் அரசியல் கட்சிகளிடையே பல்வேறு விவாத பொருளாக மாறியது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை உரிய முறையில் விசாரணை
செய்வதற்கு குழுவை அமைத்து அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதியையும் தலைமையில் நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் சிபிசிஐடி போலீஸ் தங்களுடைய விசாரணையில் 11 பேரை சந்தேகப்படுவதாகவும் அவர்களுடைய டி என் ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதற்கு நீதிமன்றம் உத்தரவு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதை விசாரணைக்கு ஏற்ற மாவட்ட எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி சத்யா
சிபிசிஐடி கோரிக்கையை ஏற்று 11 பேர் இடம் டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுமதி
அளித்து உத்தரவிட்டார். இந்த நிலையில் சிறப்பு மருத்துவர்கள் குழு இன்னும் இரு தினங்களில் 11 பேரிடமும் டிஎன்ஏ ரத்த பரிசோதனை செய்யப்படும் என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் கலந்த மனிதக் கழிவுகள் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடையது என பகுப்பாய்வு பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பகுப்பாய்வு முடிவின் அடிப்படையில் 11 பேரிடம் விரைவில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட உள்ள நிலையில், ஆயுதப்படை காவலர் உட்பட இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. டிஎன்ஏ மற்றும் குரல் மாதிரி பரிசோதனைக்கு பிறகு குற்றவாளிகள் யார் என்பது தெரியவர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.









