செல்போனை திருடியதாகக் கூறி, மீனவர் ஒருவரை சக மீனவர்களே கிரேனில் தலைகீழாகக் கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த, மீனவர் வைலா சீனு. இவரை, மங்களூரு அருகில் உள்ள பண்டர் துறைமுகப் பகுதியில், படகு ஒன்றில் தலைகீழாக ஒரு கும்பல் கட்டித் தொங்கவிட்டது. கிரேன் மூலம் தொங்கவிடப்பட்ட அவரை ஒரு கும்பல் சுற்றி நிற்கிறது. அவருடன் வந்த சக ஆந்திர மீனவர்களே, அவரை கட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்கள், சீனுவை தாக்கி, போனை எடுத்ததாக ஒப்புக்கொள்ளும்படி கேட்கின்றனர். அவர் இல்லை என்று மறுக்கிறார். அவர், கால் வலிக்கிறது, கயிற்றை அவிழ்த்துவிடுங்கள் என்கிறார். அந்தக் கும்பலில் ஒருவர், அவரை அடிக்கிறார். மற்றொருவர் அடிக்க வேண்டாம் என்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’இந்த சம்பவம் கடந்த 15 ஆம் தேதி நடந்துள்ளது. ஆனால், புதன்கிழமை (22-12-2021)தான் வெளியே தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்று மங்களூரு வடக்குப் பகுதி போலீசார் தெரிவித்துள்ளனர்.