நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் ரோசய்யா, இந்திய முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விலக்கு பெற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். எந்தவொரு நுழைவுத்தேர்வும் ஏழை, எளிய மாணவர்களை பாதிக்கும் என தெரிவித்த முதலமைச்சர், நீட் தேர்வு வசதி வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நீட் தேர்வு மாணவர்களின் கல்விக்கனவை சிதைப்பதாகவும், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், நீட் விலக்கு மசோதா குறித்து டி.ஆர்.பாலு தலைமையில் உள்துறை அமைச்சகத்தில் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்ததை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு எம்பிக்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்தது, மக்களாட்சியின் மாண்புக்கு எதிரானது என தெரிவித்தார்.
நீண்ட நெடிய அரசியல், சட்டம் மற்றும் மக்கள் போராட்டத்திற்கு பின்னரே சமூக நீதி போராட்டத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது என்றும், நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான போராட்டத்தையும், சமூக நீதி இயக்கத்தின் அடுத்தகட்ட போராட்டம் எனக்கருதி முன்னெடுத்து செல்வோம் எனவும் முதலமைச்சர் உறுதிபட தெரிவித்தார். அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட உள்ளதாகக் கூறிய அவர், கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும் என்றும் சட்டப்பேரவையில் உறுதிபடத் தெரிவித்தார்.