நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த வழக்கில், 10 டிஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் இந்த வழக்கு முடிவு பெறும் எனவும் தென் மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக தென்மண்டல ஐஜி கண்ணன் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,
“ஜெயக்குமார் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டது. உடலில் கடப்பாக்கல் கட்டப்பட்டிருந்தது. உடல் கருகிய நிலையில் இருந்தது. பின்னங்கால் முழுதும் எரியாத நிலையில் இருந்தது. பின்பகுதி எதுவும் எறியாமல் இருந்தது. பாத்திரம் கழுவும் ஸ்கிரப்பர் அவரது வாயிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது.
கிடைத்த தகவல் மற்றும் தடையங்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த வழக்கிலும் இல்லாதது போல் புலனாய்வு நடந்து வருகிறது. உடற்கூறு ஆய்வு அறிக்கை முழுமையாக இதுவரை கிடைக்கப் பெறவில்லை. முதற்கட்ட ஆய்வறிக்கை மட்டுமே கிடைத்துள்ளது. ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சைபர் க்ரைம் தடைய அறிவியல் துறை கைரேகை நிபுணர் குழு என பல்வேறு அறிவியல் ஆய்வுகளும் சோதனைகளும் இந்த வழக்கில் நடந்து வருகிறது.
விசாரணை முழுமை பெறவில்லை. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு சந்தேக மரணம் என பதியப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த தகவலை வைத்து கொலையா? தற்கொலையா? என எதனையும் உறுதி செய்ய முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பான பல தகவல்கள் கிடைக்கப்பெற வேண்டும்.
முதற்கட்ட பிரேத பரிசோதனையில் காயங்கள் இருந்ததாகவும், இறந்த உடலை எரித்ததாகவும் எந்த தகவலும் இல்லை. ஜெயக்குமார் எழுதிய கடிதத்தை அறிவியல் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. டிஎன்ஏ சோதனை உட்பட பல்வேறு அறிக்கைகள் கிடைக்க வேண்டியுள்ளது. ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கில் பணம் தொடர்பான பிரச்னை, அரசியல் தொடர்பான பிரச்னை என பல உள்ளன.
குடும்பத்தினர், உறவினர்கள், அரசியல் கட்சியினர் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது. சபாநாயகர் பெயரும் கடிதத்தில் இடம் பெற்றுள்ளது. தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும். இந்த வழக்கு விசாரணை கூடிய விரைவில் முடிவுபெறும்”
இவ்வாறு தெரிவித்தார்.







