திருமணம் எப்போது என்ற காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.
ரேபரேலி தொகுதியில் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5,34,918 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரது நெருங்கிய போட்டியாளரான தினேஷ் பிரதாப் சிங் 3,67,740 வாக்குகளைப் பெற்று வலுவான சவாலை முன்வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், 53 வயதாகும் ராகுல் காந்தி கேரளத்தில் வயநாட்டில் தற்போதைய எம்பியாக உள்ளார். இந்த முறை வயநாட்டில் போட்டியிடுவதோடு, ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கையும் ராகுல் காந்தி எதிர்கொள்கிறார்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் தனது திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். ”ராகுல் காந்தியின் திருமணம் எப்போது?” என கூட்டத்தில் இருந்து பலத்த குரல்கள் எழும்பிய நிலையில், ”இப்போது, நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என்று பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி. முன்னதாக கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் கேட்ட கேள்வி ராகுலுக்கு சரியாக கேட்கவில்லை. அதன்பின் சுதாரித்துக் கொண்ட அவர், சிரித்துக்கொண்டே பதிலளித்துவிட்டு மேடையிலிருந்து நகர்ந்தார்.
கடந்த ஆண்டு ஜெய்ப்பூரின் மகாராணி கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடியபோது, தான் ’ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்பதை வெளிப்படுத்தினார் ராகுல் காந்தி. ”புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்தபோதிலும் திருமணத்தை ஏன் கருத்தில் கொள்ளவில்லை” என்று ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதிலளித்த அவர், ’தனது பணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், தான் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும், திருமணத்திற்கு இடமளிக்கவில்லை’ என்றும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.