அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் உயிரிழப்பு க்கான காரணம் தொடர்பாக, அவரது செல்போன்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல், ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரி நல்லம்மா நாயுடு வீட்டில்
நடந்த கொள்ளை வழக்கு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த சங்கர் ஜிவால், பொது இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும், அதிமுக அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியதாக ஒருவரிடம் இருந்து புகார் வந்துள்ளதாகவும், அதற்கு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மனுதாக்கல் செய்தனர். வேட்புமனு வாங்க வந்த சிலரை அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து தொண்டர்கள் விரட்டியடித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இவ்வாறு சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.