முதியவரை கட்டிப்போட்டுவிட்டு கொள்ளயடித்து தப்ப முயன்ற காதல் ஜோடியை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கோவை வடவள்ளி அடுத்த பொம்மணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள்பெரிய ராயப்பன் – ராஜம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில் வயதான முதியவர்களான இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று முன் தினம் ராஜம்மாள் தன் கணவருக்கு உணவு கொடுத்து விட்டு, மருமகள் வருவாள் என கூறி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த காதல் ஜோடி, வீட்டின் வெளியில் தனியாக அமர்ந்திருந்த பெரிய ராயப்பனிடம் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளனர். தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்ற பெரிய கருப்பனை பின்தொடர்ந்து சென்ற காதல்ஜோடி வீட்டிற்குள் சென்றவுடன் முதியவரின் இருகை கால்களையும் கட்டி , வாயில் டேப் சுற்றி சமையல் அறையில் தள்ளி விட்டு உள்ளனர். அதை தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோ மற்றும் படுக்கை அறையில் இருந்த பணம் நகைகளை தேடி கொள்ளைடித்து விட்டு வீட்டின் பின் கதவு வழியாக வெளியேறி உள்ளனர்.
அப்பொழுது முதியவரின் மருமகள் சங்கீதா சென்னையில் இருந்து வந்த நிலையில், வீட்டின் பின்பகுதியில் இருந்து சந்தேகிக்கும் வகையில் வெளியேறிய இருவரையும் தடுத்து விசாரித்துள்ளார். இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்ப முயன்ற நிலையில் சந்தேகம் அடைந்த சங்கீதா இருவரையும் பிடிக்க முற்பட்டு உள்ளார். சங்கீதாவை தள்ளிவிட்டு இருவரும் அங்கிருந்து தப்பிய நிலையில் சங்கீதா கூச்சலிட்டார். சங்கீதாவின் சத்தம் கேட்டு அப்பகுதியில் திரண்ட அக்கம்பத்தினர் ஒன்று சேர்ந்து இருவரையும் விரட்டி பிடிக்க முற்பட்டனர். அதில் ஒரு புதரில் பதுக்கிய இளம்பெண்ணை பொதுமக்கள் சுற்றி வளைத்து லாவகமாக மடக்கி பிடித்த நிலையில் உடன் வந்த காதலனும் பொதுமக்களிடம் சரண்டைந்தார். இருவரையும் பிடித்த ஊர்பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இருவருக்கும் தர்ம அடி கொடுத்தனர்.
பிறகு, வீட்டின் சமயலறையில் இருந்த முதியவரை மீட்டு இது குறித்து வடவள்ளி காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த தேவராஜ் மகள் சென்பகவள்ளி என்பதும் தற்போது சிங்காநல்லூர் பகுதியில் வசித்து வருகிறார் என்பதும் கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பதும் தெரிய வந்தது. இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்த நிலையில் நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர். பட்டதாரிகளான இருவரும் உல்லாசமாக வாழவும் பல இடங்களுக்கு சுற்றுலா செல்ல பணம் தேவைப்பட்டது . இதனால் இருவரும் கிராம பகுதிகளை தேர்வு செய்து புத்தகம் விற்பனை செய்வது போல் வீட்டில் இருக்கும் நபர்களை கண்காணித்து வந்துள்ளனர். வீட்டில் தனியாக முதியவர்கள் உள்ள வீடுகளை குறித்து வைத்து வீடு புகுந்து கொள்ளை அடித்து வந்தனர்.
மேலும் கொள்ளை அடிக்க யூடுப் பார்த்து கற்றக்கொண்டதோடு,அதற்கு தேவையான சில கூர்மையான ஆயுதங்களான சுத்தி , கயிறு , பிளாஸ்டர் , உலி , திருப்புலி உள்ளிட்டவை கொண்டு கொள்ளை அடித்து வந்ததும், குறிப்பாக பெரிய ராயப்பன் வீட்டை கொள்ளையடிக்க ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டது தெரியவந்தது. இதனை இருவரிடமிருந்தும் இருசக்கர வாகனம், இரண்டு நம்பர் பிளேட்கள் , கூர்மையான கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூதாட்டியை கட்டிவைத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடையவர்களா என்பது குறித்தும், கோவை மாநகர் பகுதியில் வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.