8 ஆண்களைத் திருமணம் செய்தும், பல ஊர்களில் தங்கி உறவினர்போல் நடித்து கோடிக்கணக்கில் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்தவருமான திருநங்கை பபிதா ரோஸை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம், சந்தைபேட்டை கனகனந்தல் பகுதியில் வசித்து வந்தவர் பபிதா ரோஸ் (30). திருநங்கையான இவர் திருச்சி மாவட்டம், வளநாடு அருகே உள்ள அ.புதுப்பட்டியில் தோட்டத்துடன் கூடிய வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் கம்மாள தெருவைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரரான முருகேசன் என்பவர், ஒரு சதுர அடி ரூ. 1 லட்சத்து 70 ஆயிரம் என்று பேசி கூடுதலாக சுற்றுச்சுவரும் கட்டி கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அவரிடம் ரூ. 10 லட்சத்தை பபிதாரோஸ் வாங்கி பணப் பரிவார்த்தனையும்
பெற்றுள்ளார். இதையடுத்து, தனக்கு வர வேண்டிய மொத்தம் ரூ. 21 லட்சத்தை பபிதா ரோஸிடம் முருகேசன் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, முருகேசன் வளநாடு போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான திருநங்கை பபிதா ரோஸை தேடி வந்தனர். இந்நிலையில் துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீஸார் பபிதா ரோஸை நேற்று இரவு கைது செய்தனர்.
பபிதா ரோஸ் ஏற்கனவே எட்டு பேரை நாடகத் திருமணம் நடத்தி அவர்களிடம்
லட்சக்கணக்கில் பணத்தை பறித்து ஏமாற்றியதாகவும், புதுக்கோட்டை, கன்னியாகுமரி,
திருநெல்வேலி, பொள்ளாச்சி போன்ற பல ஊர்களில் தங்கி அங்குள்ள பலரிடம் குடும்ப
உறுப்பினர் போல் நடித்து நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய்களை கொள்ளையடித்ததாக 10க்கும் அதிகமான காவல் நிலையங்களில் இவர் மீது புகார் இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 15 நாட்களுக்கு முன்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரிடம் பாதிக்கப்பட்ட 20க்கும் அதிகமானோர் ஒன்று சேர்ந்து புகார் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருநங்கையர் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் பபிதா ரோஸால் சமூகத்துக்கு இழுக்கு ஏற்படுவதால் அவரை பிணையில் வராதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் நல கூட்டமைப்பு சார்பில் காவல் துறையினருக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.