கேரளாவில் உலக புகழ்பெற்ற திருச்சூர் பூரம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள பிரமாண்டமான கோவில் திருவிழாக்களில் ஒன்று திருச்சூர் பூரம். திருச்சூர் பூரம் திருவிழா கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோவில் அமைந்திருக்கும் தேக்கின்காடு பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாளில் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ நடத்தப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதி, திருவெம்பாடி பகவதி ஆகியோர் வடக்குநாதரைப் பார்க்கும் பூரம் நாள் தான் ‘திருச்சூர் பூரம் திருவிழா’ என்கின்றனர். இந்தத் திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தத் திருவிழாவின் போது, இந்த ஊரிலுள்ள நான்கு அம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும் யானைகள், அணிவகுத்து நிற்பது சிறப்பாக இருக்கும். இவ் விழாவில் அலங்கரிக்கப்பட்ட யானைகளில் எதிர் எதிர் திசைகளில் நின்று முத்துக்குடை பரிமாற்றம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். இந்தத் திருவிழாவில் யானைகள் அலங்காரம் மற்றும் வண்ணமயமான முத்துக்குடைகள் ஆகியவற்றைக் காண்பதற்காக கேரளா, தமிழகம் மட்டுமில்லாமல், கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள்.
அந்த வகையில், 36 மணி நேரம் நடைபெறும் உலக புகழ் பெற்ற திருச்சூர் பூரம் நிகழ்ச்சி காலை 7 மணிக்கு தேக்கின்காடு மைதானத்தில், கனிமங்கலம் சாஸ்தாவு மற்றும் ‘கடக பூரங்கள்’ என்று அழைக்கப்படும் துணை பூரம் ஊர்வலத்துடன் அருகில் உள்ள கோவில்களில் இருந்து வரும் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. காலை 11 மணிக்கு திமில, மத்தளம், சங்கு, , ஈடாக்கா போன்ற வாத்தியங்களுடன் கலைஞர்களின் கூட்டமான ‘மடத்தில் வரவு’ நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 12 மணிக்கு ‘பகவதி’ அம்மன் ஊர்வலமும் பஞ்ச வாத்திய மேளங்கள் உடன் இலஞ்சித் தறை மேளம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பாரமேக்காவும் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின் சார்பில் போட்டி போட்டு கொண்டு யானைகள் மீது நின்று முத்து மணி குடை நிகழ்வு இன்று மாலை நடைபெறுகின்றன.
இதையடுத்து, வண்ண வண்ண வாண வேடிக்கைகளும் நடைபெருக்கின்றன. இந்த நிகழ்வுகளை காண வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கலந்து கொண்டுள்ளனர்.இதனால் அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பி.ஜேம்ஸ் லிசா