சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமரை சாடியுள்ளார்
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு 4, 5, 6, 7வது கட்டம் என நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேபோல், மொத்தம் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு மே 13, 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தில் பிஜு ஜனதாதளம், பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்தலையொட்டி அம்மாநிலத்தின் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ஒடிசாவில் 50 ஆண்டுகளாக காங்கிரஸும், 25 ஆண்டுகளாக பிஜு ஜனதாதளம் கட்சியும் ஆட்சி புரிந்து மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. ஜூன் 4-ம் தேதி வாக்கு முடிவுகள் வரும்போது பிஜு ஜனதா தளம் அரசு காலாவதியாகி விடும். அன்று பாஜகவின் புதிய முதலமைச்சர் அறிமுகம் செய்யப்படுவார். ஜூன் 10-ம் தேதி, புவனேஸ்வரில் பாஜக முதலமைச்சரின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்” என்றார்.
இந்நிலையில், ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து நவீன் பட்நாயக் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது,
“மோடி அவர்களே ஒடிசா பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? எங்களது ஒடியா மொழி மிக நீண்ட வரலாறு கொண்ட ஓர் உயர்தனிச் செம்மொழி. ஆனால் சமஸ்கிருத வளர்ச்சிக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய நீங்கள் ஒடியா மொழி வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை வெறும் பூஜ்ஜியம். பாரம்பரியம் மிக்க ஒரிசா இசையை செம்மாந்த இசையாக அறிவியுங்கள் என்று 2 முறை கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை 2 முறையும் நிராகரித்து விட்டீர்கள்.
ஒடிசா மாநிலத்தின் சாதனை நாயகர்களை நீங்கள் அங்கீகரித்ததே இல்லை. எங்கள் மகத்தான தலைவர் பிஜு பட்நாயக்கிற்கு பாரத் ரத்னா விருது வழங்குவதை திட்டமிட்டே புறக்கணித்தீர்கள். ஒடிசா விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு 2 மடங்கு ஆதார விலை கிடைக்கும் என்றீர்கள். விவசாயிகளை ஏமாற்றி விடீர்கள். கடற்கரை சாலை அமைத்துத்தந்து ஒரிசா வளர்ச்சியை உறுதி செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். அதையும் மறந்து விட்டீர்கள்.
ମୋର କ'ଣ ମନେ ଅଛି କି ନାହିଁ ସେଇଟା ମୋର ପ୍ରିୟ ସାଢ଼େ ଚାରି କୋଟି ଓଡ଼ିଶାବାସୀ ଜାଣିଛନ୍ତି। #JodiShankha pic.twitter.com/OpkecsQt72
— Naveen Patnaik (@Naveen_Odisha) May 11, 2024
நிலக்கரிதான் ஒடிசாவின் இயற்கை வளம். எங்கள் செல்வத்தை அடிமாட்டு விலைக்கு அள்ளிச் செல்கிறீர்கள். அதற்கான விலையை கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தவே இல்லை. 2014 தேர்தலிலும் 2019 தேர்தலிலும் விலைவாசியைக் குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பேன், பெட்ரோல் விலை குறைப்பேன், டீசல் விலை குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஜி.எஸ்.டி குறைப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மறந்து விட்டீர்கள்.
தேர்தல் வந்ததும் ஓட்டுக் கேட்டு மீண்டும் ஒரிசாவுக்கு வருகிறீர்கள். ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்து நீங்கள் ஏமாற்றியதை ஒரிசா மக்கள் மறக்கவில்லை. பூரி ஜெகன்னாதர் சாட்சியாக சொல்கிறேன். ஒன்றியத்தில் இந்த முறை நீங்கள் ஆட்சி அமைக்கப்போவதில்லை. ஒடிசாவில் 6ஆவது முறையாக பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைக்கும்.” என நவீன் பட்நாயக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.







