குஜராத்தில் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்தி பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழிவிடுமாறு உத்தரவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத்துக்கு நேற்று சென்றார். ஆமதாபாத்தில் நேற்று 36-வது தேசிய விளையாட்டு போட்டியை அவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பாவ்நகர் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
2-வது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்டிரல் இடையேயான புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதனை தொடர்ந்து, காந்திநகரில் இருந்து அகமதாபாத்துக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து பயணம் செய்து மகிழ்ந்தார்.
முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து ஆமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர்- அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் ஒன்று அவசரமாக வருவதை கண்டார். உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார்.
சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது. இது குறித்த வீடியோவை குஜராத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ருத்விஜ் பட்டேல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் “மோடி ஆட்சியில் விஐபி கலாச்சாரதிற்கு இடம் இல்லை’ என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
– இரா.நம்பிராஜன்








