திருமண நிகழ்ச்சிக்காக கோயில் இருக்கும் சாலையை மூடியதற்காக நடிகை கேத்ரினா, நடிகர் விக்கி கவுசல் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை கேத்ரினா கைஃப் – நடிகர் விக்கி கவுசல் காதல் திருமணம் வரும் 9 ஆம் தேதி நடக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகிலுள்ள சிக்ஸ் சென்சஸ் ஃபோர்ட் பர்வாரா என்ற நட்சத்திர ஓட்டலில் நடக்கும் இந்த திருமணத்தில், 120 விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தி சினிமா பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர். திருமண விழா ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இவர்கள் திருமணத்துக்காக, பழமையான கோயில் பாதையை அடைத்துள்ளதாக, ராஜஸ்தானைச் சேர்ந்த நைட்ராபிண்ட் சிங் ஜாடோன் என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் அளித்துள்ளார். கேத்ரினா- விக்கி கவுசல் திருமணத்துக்காக, பழமையான சாத் மாதா கோயில் உள்ள சாலையை 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூடியுள்ளனர்.
இந்த வழியில்தான் சிக்ஸ் சென்சஸ் நட்சத்திர ஓட்டல் இருப்பதால் இந்த சாலையை மூடியுள்ளனர். இதை எதிர்த்து அவர் அந்த புகாரை அளித்துள்ளார். கேத்ரினா, விக்கி கவுசல், நட்சத்திர ஓட்டலின் மேலாளர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் மீது புகார் தெரிவித்துள்ள அந்த வழக்கறிஞர், உடனடியாக கோயில் இருக்கும் சாலையை திறக்க வேண்டும் என்றும் இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.