தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை மாவட்ட சுகாதார அலுவலர்கள் அலுவலகத்தில் மருத்துவ முகாம் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது;
2024 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சுமார் 1,75,025 இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களில் 5,803 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தமிழ்நாடு ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் புனித பயணம் செல்ல இருக்கும் இஸ்லாமியர்களுக்கு போலியோ தடுப்பு மருந்து, மூளை காய்ச்சலை தடுக்கக்கூடிய தடுப்பூசி போன்றவற்றை செலுத்த வேண்டும். இவர்களுக்கான மருத்துவச் சோதனையை மாநில அரசு கமிட்டி அல்லது மாவட்ட அரசு, சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த மருத்துவ முகாம் 38 மாவட்டங்களிலும் இன்று முதல் நடைபெறுகிறது. சென்னையில் சூளை பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி அலுவலகத்தில் நடைபெறும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளுக்கு இந்த காலத்தில் பொதுவாக வரக்கூடிய நோய்களுக்கான தடுப்பு ஊசிகளையும் செலுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுரை வழங்கி உள்ளது.







