டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஸ்க்ராட்ச் கார்டு மோசடியில் பெண் ஒருவர் ரூ.18 லட்சம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது பணம் பரிவர்த்தனைகளை விட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இது எளிதாகவும் இருக்கிறது. அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இதற்காகவே போன் பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற நிறைய மொபைல் ஆப்கள் வந்துவிட்டன.
இந்த ஆப்களில் பணம் அனுப்புவது போன்ற செயல்பாடுகளில் வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதற்காக அவ்வப்போது கேஷ் பேக், ரிவார்டு, ஷாப்பிங் பாயிண்ட் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்கிராட்ச் கார்டு போன்றவற்றை நாம் பயன்படுத்தினால், அதில் நமக்கு சலுகைகள் கிடைக்கும். இதில் ஆயிரக்கணக்கில் பரிசு வென்றவர்களும் உண்டு. சிலர் இதற்காகவே டிஜிட்டல் பரிவர்த்தனை மொபைல் ஆப்களை அதிகமாகப் பயன்படுத்துவர். இந்த விஷயத்தில் வாடிக்கையாளர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இதிலும் ஆன்லைன் மோசடிகள் வந்துவிட்டன.
இதையும் படியுங்கள் : “உடல்பருமனை குறைக்க செயற்கை சிகிச்சை மேற்கொள்வது சரியானது அல்ல” – நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேட்டி!
இந்நிலையில், ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கிய பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வந்த ஸ்க்ராட்ச் கார்டை திறந்துபார்த்ததன் விளைவாக, அவர் ரூ.18 லட்சத்தை இழந்துள்ளார்.
அந்த பெண் திறந்த ஸ்க்ராட்ச் கார்டில், நீங்கள் ரூ.15.51 லட்சம் வென்றிருக்கிறீர்கள் என்று செய்தியுடன் ஒரு செல்போன் எண்ணும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருந்த தகவல் படி, அந்த பெண்ணும் அந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். செல்போனில் பேசிய அடையாளம் தெரியாத நபர், அந்த பெண்ணின் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களைக் கோரியிருக்கிறார்.
இதுபோன்ற பரிசுகளுக்கு 4 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறி படிப்படியாக அவரிடமிருந்து ரூ.18 லட்சம் வரை அந்த நபர் ஏமாற்றிப் பெற்றிருக்கிறார். சில நாட்களுக்கு பிறகு அந்த நபரை செல்போனில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.
எனவே, ஸ்க்ராட்ச் கார்டு என்பதன் மூலம், உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது என்ற செய்திகள் வந்தால் அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.









