நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன் ஜாமீன் கோரி முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், “கடந்த 2018ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கோவில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றபோது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் என் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்நிலையத்தில் நான் உட்பட பல்வேறு நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
தற்போது, இந்த வழக்கில் திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்ற பத்திரிக்கையில் என்னை தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
எனவே, இந்த வழக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றுகிறேன்.” என்று தனது மனுவில் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







