தமிழகத்தில் போலி மற்றும் மோசடி பத்திரப்பதிவுகளை பதிவாளர்களே ரத்து செய்யும் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் குவிந்துள்ளன.
தமிழகத்தில் மோசடி, போலி, பத்திரப் பதிவுகளை தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் மத்திய பதிவுச் சட்டத்தில் தமிழக அளவில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம், போலி பதிவுகள் குறித்து பதிவாளரே ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய முடியும். இந்த மசோதா அறிமுகள் செய்யப்பட்ட அன்றே ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், மத்திய சட்டத்தில் திருத்தம் என்பதால் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டத்திருத்தம் அமல்
இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்த சட்டத்திருத்திற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, பொய்யான பத்திரம், நடைமுறையில் உள்ள சட்டங்களால் தடைசெய்யப்பட்ட பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள், மத்திய, மாநில சட்டங்களின் படி தகுதியான அதிகார அமைப்பு, நீதிமன்றம், தீர்ப்பாயம் என இவற்றால் நிரந்தரமாக, தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள அசையா சொத்தை விற்பனை, கொடை, குத்தகை அல்லது வேறு வகையில் உரிமை மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள், அரசால் இணைக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்க வேண்டும்.
அதேநேரம் பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்தப் பதிவை பதிவாளர் தானாக முன்வந்தோ, புகார் மீதோ, எழுதிக் கொண்டிருக்கும், ஆவணத்தின் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் தொடர்ச்சியான ஆவணங்கள் இருந்தால் அவற்றின் தரப்பினருக்கும், பதிவு ரத்தால் பாதிக்கப்படுவர்களுக்கும், இந்த பத்திரப்பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேட்டு அறிவிப்பு வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால் அதை கருத்தில் கொண்டு ஆவணப்பதிவை பதிவாளர் ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு.
அதேநேரம், பதிவாளரின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள், பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுகக்கள் பதிவுத்துறை தலைவரிடம் மேல்முறையீடு செய்யலாம். அவர், பதிவாளரின் ஆணையை உறுதிப்படுத்துதல், திருத்தம் செய்தல் அல்லது ரத்து செய்யும் உத்தரவை வழங்கலாம். அதற்கு மேல் பதிவுத்துறை தலைவரால் உத்தரவு வழங்கப்பட்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் மாநில அரசிடம் மேல்முறையீடு செய்யலாம்.
அதேபோல், பதிவு அலுவலர் முறைகேடான பதிவுகளைச் செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். ஆனால் நல்லெண்ணத்தில் செய்யப்பட்ட பதிவுக்கு இந்த விதிகள் பொருந்தாது. குறிப்பாக சரி என்று நம்பி செய்யப்பட்ட பதிவுகளுக்கு இது பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆயிரம் மனுக்கள்
மோசடியாக பதிவான பத்திரங்களுக்கான காலவரையறை குறித்த எந்த விவரமும் சட்டத்திருத்ததில் இல்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இதற்கிடையே பதிவு ரத்து செய்தல் தொடர்பாக இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பதிவுத்துறை அலுவலகத்தில் குவிந்துள்ளன. இந்நிலையில் சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் நடைமுறை சிக்கல்களையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.