தமிழகத்தில் உள்ள 490 பேரூராட்சிகளிலும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தொகுதி வேட்டவலம் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க அரசு முன்வருவதோடு, கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த 10 ஆண்டுகளில் கூட்டு குடிநீர் திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை. தற்போது 490 பேரூராட்சிகளுக்கும் குடிநீர் ஆதாரம் எங்கு இருக்கிறதோ, அங்கிருந்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.
இதன்படி 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில் முதற்கட்டமாக 130 பேரூராட்சிகளில் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும் ஆய்வுகள் மேற்கொண்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கு காவிரி நீரை அடிப்படையாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், ரூ.9,660 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீரும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.