தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த 6 நாட்களுக்கு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை :
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 3° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை
8 இடங்களில் 40.0° செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 42.4° செல்சியஸ், சேலத்தில் 41.9° செல்சியஸ், திருப்பத்தூரில் 41.8″ செல்சியஸ், தர்மபுரியில் 41.0° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருத்தணியில் 40.2° செல்சியஸ், வேலூரில் 40.1° செல்சியஸ் மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களில் 38° – 40° செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 38° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 36.7° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.2° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மழைக்கான அறிவிப்பு :
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், ஏப். 28 ஆம் தேதி முதல் மே.1 ஆம் தேதி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே. 2 ஆம் தேதியை பொறுத்தவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மே. 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதிகபட்ச 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
இன்றுமுதல் மே. 1 ஆம் தேதி வரை :
வட தமிழக உள் மாவட்டங்களின் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்களில் 2°-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-39° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம் :
இன்றுமுதல் மே.2 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:
இன்றுமுதல் ஏப்.30 ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
மே. 1 ஆம் தேதி அன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்’ என குறிப்பிட்டுள்ளது.