2 ஆண்டுகளுக்கு பிறகு பிரசத்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட விழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கோதை பிறந்த ஊர் கோபாலன் வாழும் ஊர் என்ற சிறப்பை பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட திருவிழா இன்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேரோட்டம்
காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேரோட்டத்தினை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆகியோர் வடம் பிடித்துதொடக்கி வைத்தனர். இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனோ பாதிப்பு காரணமாக தேரோட்டம் நடைபெறாத நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத்தையொட்டி இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
தேரின் சிறப்பம்சம்
96 அடி உயரம் கொண்ட இத்தேர் திருவாரூர் தேருக்கு அடுத்த (2 வது இடம்) உயரமான தேர் என்ற சிறப்பை பெற்றுள்ளது. தேரில் கலைநயமிக்க மரச்சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது இத்தேரின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. தேரினை இழுக்க 7 வடங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 2 வடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2 பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தேர் இழுக்கப்படுகிறது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஆண்டாள் ரெங்கமன்னர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை, மதுரை, விருதுநகர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நெல்லை, சிவகாசி, மதுரை செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், நடமாடும் கழிவரை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களை தடுக்க 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 200 சீருடை அணியாத காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவமனை மற்றும் 2 தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது.