‘மாமனிதன்’ திரைப்படத்தின் ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு தன்னை அழைக்கவில்லை என வருத்தப்பட்ட இயக்குநர் சீனுராமசாமி, “இளையராஜா மீது எனக்கு ஆதங்கம்தான், குற்றச்சாட்டு இல்லை” என்று கூறியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு வடபழனியில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் சீனுராமசாமி, காயத்ரி, ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் பேசிய தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், “வாழ்வியல் சார்ந்து திரைப்படங்கள் எடுக்க சில இயக்குநர்கள்தான் உள்ளனர். அதில் சீனுராமசாமி முக்கியமானவர். படத்தை பார்க்கும் போது இது என்னுடைய குடும்பத்தில் நடந்தது போல இருந்தது. குடும்ப தலைவனாக இருக்கும் அனைவரும் சந்திக்கும் பிரச்சினையாக இந்த படம் இருக்கும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “விஜய் சேதுபதி வளர்ச்சி பிரமிப்பாக இருந்தது. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியை பார்க்கும்போது என்னுடைய தந்தையைப் பார்ப்பது போல உள்ளது. இந்த மாதிரி தமிழ் படங்கள் வருவது அரிது. இந்த படம் ஜீன் 24ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. படத்திற்கு எந்த அளவிற்கு விளம்பரம் தேவை என்பதை கமல் சார் சொல்லி கொடுத்துள்ளார்.” என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.
சுரேஷையடுத்து பேசிய கதாநாயகி காயத்ரி, “மாமனிதன் ஒரு காதல் கதை. குடும்பத்திற்குள் உள்ள காதலை மாமனிதன் படத்தில் பதிவு செய்துள்ளார் சீனுராமசாமி. இளையராஜா இசையில் நடிப்பது கனவாக இருந்தது. அது உண்மையாக மாறியிருக்கிறது.” என பெருமையுடன் கூறினார்.
நடிகை காயத்திரியை தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, “மாமனிதன் படத்தில் நடித்தால் தந்தை இளையராஜாவுடன் இணைந்து இசையமைப்பதாக யுவன்சங்கர் ராஜா தெரிவித்தார். அது எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய குரு சீனுராமசாமி இந்த படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். தன்னலம் பார்க்காத தகப்பன், தாய், நண்பனை பற்றிய கதைதான் மாமனிதன். சீனுராமசாமியின் வசனங்கள் மிகவும் எளிமையாக இருக்கும்.” என்று திரைப்படம் குறித்தும் இசையமைப்பு குறித்தும் பேசினார்.
மேலும், “சீனுராமசாமி போல் கிராமியக் கதையை பதிவு செய்ய யாரும் இல்லை. ஒவ்வொரு படத்தையும் தெளிவாக எடுப்பவர் இயக்குநர் சீனுராமசாமி. அவருடன் தொடர்ந்து பயணிப்பதில் பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 55 நாட்கள் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து 37 நாட்களில் எடுத்து முடித்தோம். ” என்று கூறினார்.
இறுதியாக பேசிய இயக்குநர் சீனுராமசாமி, “ராதாகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி சிவாஜி கணேசனின் பெயரில் பாதி பெயரை வாங்க வேண்டும் என்று சிவாஜி வீட்டு வாசலில் உள்ள விநாயகர் கோயிலில் நின்று வேண்டிக் கொண்டேன்.” என பேசிய சீனுராமசாமி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
தொடர்ந்து பேசிய அவர், “யுவன் சங்கர் ராஜா, இளையராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இந்த படத்தில் இசையமைப்பதாக முதலில் சொன்னார்கள். ஆனால் கார்த்திக் ராஜா இசையமைக்கவில்லை. இது அவர்கள் எடுத்த முடிவு. மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியை உலகமே திரும்பிப் பார்க்கும்.” என்று கூறினார்.
மேலும், படத்தின் ரீ-ரிக்கார்டிங் பாடல் பதிவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று சீனுராமசாமி வருத்தப்பட்ட சீனுராமசாமி, இப்போது வரை பாடல்பதிவுக்கு என்னை ஏன் அழைக்கவில்லை என்று தெரியவில்லை என்றும் நான் ஏன் நிராகரிக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் தெரியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இளையராஜாதான் இப்படத்தின் மாமனிதன். இளையராஜாவோடு நிறைய படங்களோடு பணியாற்ற ஆசைப்படுகிறேன். பேரன்பு வைத்திருப்பவர்களை காரணமின்றி நிராகரிக்கக் கூடாது” என இளையராஜாவுக்கு சீனுராமசாமி வேண்டுகோளும் விடுத்தார். மேலும், இளையராஜா மீது தனக்கு இருப்பது ஆதங்கம்தான், குற்றச்சாட்டு இல்லை என்றும் சீனுராமசாமி குறிப்பிட்டார்.
இறுதியாக செய்தியாளர்கள் விஜய் சேதுபதியிடம் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்த உங்களுக்கு கமல் என்ன கொடுத்தார் என கேள்வியெழுப்பப்பட்டது, அதற்கு “கமல் அவருடன் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அதுவே பெரிய விஷயம்” என விஜய் சேதுபதி பெருமையுடன் கூறினார்.
இறுதியாக பேசிய சீனுராமசாமி, மாமனிதன் படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்தால் எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்தார். பென்ஸ் கார் விலை எவ்வளவு என்று கூட எனக்கு தெரியாது. எனக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை.” என்று கூறினார்.