அனிமல் திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ராஷ்மிகா மந்தனா நெகிழ்ந்துள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில்
இந்தியில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்’. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1
ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும்
இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர்,
பாபி தியோல், பரினிதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்
நடித்துள்ளனர்.
இப்படம் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என
பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நவம்பர் 27 நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு, ரன்பீர் கபூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள்.
இந்த நிகழ்ச்சி குறித்து ராஷ்மிகா தனது எக்ஸ் பக்கத்தில், “எனக்கான ஃபிரேம் இதுதான். எனக்காக இந்த தருணத்தை படம் பிடித்தவர்களுக்கு மிக்க நன்றி. அன்பு, மரியாதை, வெதுவெதுப்பான சூழல், பைத்தியம், பதட்டம் என எல்லாமே நிறைந்திருந்தது. ஆனால் இதையெல்லாம் தாண்டி அற்புதமான தருணமாக அமைந்தது. இந்த எல்லையில்லா அன்புக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நேற்றைய நாளுக்காக அனைவருக்கும் நன்றி. அனிமல் திரைப்படம் இன்னும் 3 நாள்களில் வரவிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.







