கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாக கூடிய வகையில் பாஸ்போர்ட்டை வழங்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட், 2014 முதல் 2024 மார்ச் 5 வரை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதால், 1 ஆண்டுகளுக்கு மட்டும் தான் பாஸ்போர்டை புதுப்பிக்க முடியும் என மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அறிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து, கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, “மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக மனுதாரர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. போலியாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு முன் விசாரணை நீதிமன்றத்தின் நிபந்தனை அனுமதியுடன் சென்றுள்ளார். பாஸ்போர்ட் மறுப்பதற்கு ஆதாரம் இல்லாத நிலையில் மறுக்கப்பட்டுள்ளதை ஏற்க முடியாது” என்றார்.
இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “குற்ற வழக்குகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு 1 ஆண்டுகள் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும் என 1993ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, பாஸ்போர்ட் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “கார்த்தி சிதம்பரத்துக்கு 10 ஆண்டுகள் செல்லும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்து, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனையுடன் வெளிநாடு செல்லலாம்” என குறிப்பிட்டுள்ளார்.