‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10.00 மணி அளவில் சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் அக்கட்சியின் கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாள் விழாவைச் சென்னையில், அண்ணா கலையரங்கில் நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிப்பதாகவும், நீண்ட நெடிய நாடாளுமன்ற அனுபவமும், கொள்கை உறுதியும் மிக்க யஷ்வந்த் சின்காவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதிமுகவின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் நடத்த வேண்டிய சூழலில் உறுப்பினர் சேர்ப்புப் பணியை வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் விரைந்து முடித்து, உறுப்பினர் படிவங்களை உரியத் தொகையுடன் தலைமைக் கழகத்தில் சேர்த்திட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்வதாகவும், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து நிகழ்ச்சி நிரலில் மீண்டும் சேர்க்கப்பட்டால், அக்கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு புறக்கணிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கைத் துரிதப்படுத்த வேண்டும் என்று மதிமுக கேட்டுக்கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ‘இந்திய இராணுவத்தைக் காவிமயமாக்கு’ என்று ஆர்.எஸ்.எஸ். முழங்கி வருவதற்குச் செயல் வடிவம் கொடுக்க பா.ஜ.க. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்த முனைந்துள்ளது. சங் பரிவாரங்களின் கனவான இந்து ராஷ்டிரத்தின் காலாட் படையாக, காவிப் படையாக இந்திய இராணுவத்தை மாற்றும் முயற்சிக்கு இக்கூட்டம் கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், ‘அக்னி பாதை’ திட்டத்தைக் கைவிட வலியுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘பாதுகாப்பற்ற சூழலில் மாணவிகள்; சுற்றுச்சுவரைச் சீர் செய்யக் கோரிக்கை’
கூடங்குளத்தில் அணுஉலைக் கழிவு சேமிப்பு மையம் அமைப்பதற்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் கூடங்குளத்தில் அமையும் 3ஆவது மற்றும் 4ஆவது அலகு அணுஉலைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள அனுமதியையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வலியுறுத்துவதாகவும், நூல் விலை உயர்வைத் தடுக்கத் தவறிய ஒன்றிய அரசுக்கு இக்கூட்டம் கண்டனம் தெரிவிப்பதுடன், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும் எனவும், மறுமலர்ச்சி தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி சார்பில், கழக கொள்கை விளக்கப் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை மாவட்டந்தோறும் நடத்துவது என்று இந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளதாக அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.