ஒரு நோயாளி போலியான 500 ரூபாய் நோட்டை கொடுத்து, மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று சென்ற சம்பவத்தை சம்மந்தப்பட்டவரே பகிரந்துள்ள நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனைவரும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு பழகி வரும் நிலையில், சிலர் இன்னும் கரன்சி நோட்டுகள் மூலம் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். குறிப்பாக, கொரோனா பாதிப்பால் பணம் கைமாறுவது குறைந்ததால், நோட்டுகளின் அளவும் குறைந்துள்ள இந்த சூழ்நிலையிலும் கரன்சி நோட்டுகளை பயன்படுத்துவது பாராட்டுக்குரியதாக இருந்தாலும், சிலர் போலி ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றினால் என்னவென்று சொல்வது ?
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான மனன் வோரா மருத்துவராக மட்டுமின்றி, உடல்நலம் தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிரும் கண்டென்ட் கிரியேட்டராகவும் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில், மெட்டாவின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமூக ஊடகத் தளமான த்ரெட்ஸ் ஆப்க்கு சென்று இதுகுறித்த செய்தியை பகிர்ந்து கொண்டார்.
அவர் பகிர்ந்து கொண்ட செய்தியில் கூறியிருப்பதாவது;
சமீபத்தில், நோயாளி ஒருவர் சிகிச்சை பெறுவதற்காக என்னை வந்து சந்தித்தார். எனது மருத்துவ ஆலோசனைக்கு பிறகு ரூ.500 பணம் அளித்தார். ஆனால், அந்த பணம் இரு நோட்டுகளை ஒட்டிய போலி என்பது தெரிய வந்தது. இதனை எனது ஊழியரும் கவனிக்கவில்லை. அதனை நான் பார்த்த போது எனக்கு சிரிப்பு தான் வந்தது.
அதாவது அந்த போலி நோட்டை நோயாளி கொடுத்து ஏமாற்றியதை மருத்துவர் அடையாளம் கண்டுகொண்டாலும், அவர் அந்த சம்பவத்தை விளையாட்டாக எடுத்துக் கொண்டார். இப்போது யோசிக்கும் பொழுது அவர்களுக்கும் இது பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்ற அவநம்பிக்கை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் முழுமையாக நம்ப மறுக்கிறேன். அதன்பிறகு இந்த நிகழ்வை நினைத்தது பலமுறை நான் நன்றாகச் சிரித்தேன். இந்த சம்பவம் ஒரு வேடிக்கையான நிகழ்வு என்பதால் இந்த நோட்டை என்னுடன் சேமித்து வைத்தேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு சமூக வலைதளத்தில் பகிரப்பட்டதில் இருந்து, அந்த பதிவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களும் பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றன. இதில் பயனர் ஒருவர் “போலிக்கும் உண்மைக்குமான வித்தியாசம் தெளிவாகத் தெரிந்தாலும் எவ்வளவு அழகாக ஏமாற்றியிருக்கிறார்கள்” என்று கூறி உள்ளார். மற்றொருவர், “அந்த நபர் யாராக இருந்தாலும், அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் அல்லது புத்திசாலி என்றும் சொல்லலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா