சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பிரபல உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் பீடித்துண்டு கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்த அக்கறை பகுதியில் கடந்த சில
மாதங்களாக தனியார் பிரியாணி உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் நள்ளிரவு 12:30 மணியளவில் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் என்பவர் தனது நண்பர்கள் 10 பேருடன் பிரியாணி சாப்பிட சென்றுள்ளார். பிரியாணி மற்றும் சிக்கன் டிக்கா ஆர்டர் செய்துள்ளனர்.
அப்போது அவர்களுக்கு வந்த பிரியாணியில் ஏற்கனவே துண்டு பீடி இருந்தை கண்டு அதிர்ச்சி அடைத்தனர். இதுதொடர்பாக காவல்துறைக்கும் உணவு பாதுகாப்பு துறைக்கும் வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் ஆய்வு செய்ய உள்ளனர்.






