வெற்றி பெறுவதற்கான கடமையை நாம் நேர்மையாக செய்ய வேண்டும் என தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், திமுக-வை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் வரை நமது வேகம் குறைய கூடாது என தெரிவித்தார்.
ஜெயலலிதா பேரவை சார்பில் செயல் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஜெயலலிதா ஆட்சியில் அதிமுக நிகழ்த்திய சாதனைகள் என்ற புத்தக்கதை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயகுமார், உண்மையான திராவிட ஆட்சியை அளிப்பது அதிமுக தான் என்றார். ஆனால் தற்போது திராவிட மாடல் என்று சொல்லி திமுக மக்களை ஏமாற்றி வருகின்றனர் என குற்றம்சாட்டினார். ஓராண்டில் மக்கள் மத்தியில் இவ்வளவு வெறுப்பை சம்பாதித்த ஒரு அரசு என்றால் அது திமுக தான் என சாடினார். பொய்யை சொல்வதில் அவர்கள் வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் உண்மையை முழுவதுமாக கூற நமக்கு பயிற்சி தேவைப்படுகிறது அதனடிப்படையில் தான் இரண்டு நாள் பயிற்சி நடைபெறுவதாக கூறினார். எனவே இந்த பயிற்சி முடிவில் திராவிட மாடல் என்று பொய் கூறுபவர்களின் முகத்திரையை கிழிக்கும் போர் வீரர்களாக அனைவரும் வெளியில் செல்ல வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் வாக்குறுதிகளை தருவார்கள் ஆனால் அதனை நிறைவேற்ற மாட்டார்கள் என நாங்கள் தேர்தல் பரப்புரையின் போதே எடுத்து சொன்னோம் என தெரிவித்தார். இன்றைய நிலையில், தேர்தல் நடந்தாலும் திமுக 10 இடத்தில் கூட வெற்றி பெறாது என்று மாநில உளவுப்பிரிவு சொல்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார். திமுக அரசை ஆட்சியில் இருந்து கீழே இறக்கும் வரை வேகம் குறைய கூடாது என தெரிவித்த அவர், அரசியல் கட்சி என்றால் வெற்றி பெறவேண்டும்.வெற்றி பெறுவதற்கான கடமையை, நேர்மையாக நாம் செய்யவேண்டும்.வருகிற தேர்தல் நமக்கான தேர்தல் அதற்காக உழைத்திடவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில், அதிமுக -வின் சாதனைகள், திராவிட இயக்கம் எப்படி தமிழகத்தை வளர்த்தது, திமுக ஆட்சியின் திராவிட மாடல் ஆட்சியின் உண்மை நிலை என்ன ?தனிமனித மேம்பாட்டு பயிற்சி, பேச்சாற்றல் வளர்த்தல், என்று பல தலைப்புகளில் முகாம் நடைபெற உள்ளது.