பாமக தொண்டர்கள் தன்னை நேரில் சந்திக்கலாம் என்றும், மாலையில் தொலைபேசி வாயிலாக தன்னிடம் பேசலாம் என்றும் அதன் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அண்மை காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி கொண்டார். மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் ஓய்வெடுப்பதால், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் கட்சி சார்ந்த செயல்பாடுகளுக்கு, அவரது மகனும், பாமக தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தான் பார்த்து வருகிறார். அதே நேரத்தில் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ராமதாஸ் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சனை, அரசு செய்யவேண்டிய பணிகள் என நாள்தோறும் நடக்கும் பிரச்சனைகளுக்கு அறிக்கை வாயிலாக பதிலளித்தும் வருகிறார்.
மேலும், மத்திய மாநில அரசுகளிடம் தன்தரப்பு கோரிக்கைகளையும் சமூக வலைத்தளங்கள் மற்றும் அறிக்கை வாயிலாக வலியுறுத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் காரில் அமர்ந்தபடியே பாமக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளை தனது தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் சந்தித்து வந்த அவர், தற்போது தொண்டர்களும் தன்னை நேரில் சந்திக்கலாம் என அன்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். காலையில் சந்திக்கலாம் என்றும் மாலையில் பேசலாம் என்றும் தனது பானியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பாட்டாளி சொந்தங்களுக்கு தைலாபுரம் தோட்டத்துக் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அவை இப்போதும் திறந்தே தான் இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார். தன்னை சந்திக்க விரும்பும் பாட்டாளி சொந்தங்கள், தைலாபுரம் தோட்டத்தில், தான் இருக்கும் நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சந்திக்கலாம் என்றும் அதற்காக முன் அனுமதி பெற வேண்டிய தேவை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தன்னுடன் தொலைபேசியில் பேச விரும்புவர்கள் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொண்டு பேசலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று தொண்டர்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தனது இல்லத்திலேயே தொண்டர்களை சந்திக்க முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
– இரா.நம்பிராஜன்