கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், நீதி விசாரணை தேவை என்றும் கோரி இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பலர் காயமடைந்தனர்.
சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் பள்ளியில் +2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியிலும் போரட்டம் நடைபெற்றது. இந்நிலையில், சின்னசேலம் அருகே உள்ள அந்தப் பள்ளியின் முன் இன்று காலை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 200 காவலர்கள் அங்கிருந்தனர். போராட்டக்காரர்கள் அத்துமீறி அந்தப் பள்ளிக்குள் நுழைய முயன்றனர். இதை போலீஸார் தடுக்க முயன்றபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர்.
இதையடுத்து, போராட்டக்காரர்கள் காவலர்கள் மீதும் அவர்களின் வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். ஒருகட்டத்தில் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸார் பின்வாங்கினர்.
இதையடுத்து, காவலர்களின் பேருந்தை கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்கினர். அந்தப் பேருந்துக்கும் தீ வைத்தனர். பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடத் தொடங்கியதை அடுத்து, போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் போராட்டக்காரர்களுக்கு போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காயமடைந்த காவலர்களும், போராட்டக்காரர்களும் அருகில் உள்ள மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பள்ளியில் இருந்த வாகனங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கூடுதலாக போலீஸார் வரவுள்ளனர்.