உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு, மீன்வளம் & கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதனையடுத்து, அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திட கால்நடைத்துறை அலுவலர்களுக்கு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை நந்தனம் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விவசாயிகளின் இருப்பிடங்களுக்கே சென்று துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கால்நடை வளர்ப்பு மூலம் பெறும் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.
அதேபோல நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க நெல்லையில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை & குஞ்சு பொறிப்பகம் ரூ.9.42 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என்றும், ஆண்டுக்கு 5 லட்சம் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக 1,000 ஏக்கர் மேய்க்கால் நிலங்களை மேம்படுத்த ரூ.1.67 கோடி நிதி விடுவிக்கப்படுவதாகவும், ரூ.2 கோடி மதிப்பில் புதிதாக 50 கால்நடை கிளை நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக 25 கால்நடை கிளை நிலையங்கள் ரூ.3.5 கோடி மதிப்பில் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 38,000 பேருக்கு தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும்,
நபார்டு நிதி உதவியுடன் ரூ.57.56 கோடி மதிப்பில் 85 கால்நடை நிலையங்கள், 3 கால்நடை நோய் புலனாய்வு பிரிவுகள் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.