தமிழ்நாட்டில் நாளை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் காய்கறி சந்தைகளிலும் இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் திருச்சி மீன் சந்தையில் உள்ள இறைச்சி கடைகளில் வழக்கத்தை விடவும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே போல் மளிகை கடைகளிலும் பொருள்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கரூர் வாரசந்தையில் காய்கறி வாங்க திரளான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். ஆனால், அங்கு ஏராளமானோர் முகக்கவசம் அணியாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், மதுரையில் உள்ள இறைச்சி சந்தைகளில் மக்கள் கூட்டம் களைகட்டியது. கரிமேடு, நெல்பேட்டை, மாட்டுத்தாவணி, தெற்குவாசல் ஆகிய இறைச்சி சந்தைகளில் இறைச்சி வாங்குவதற்காக அதிக அளவிலான மக்கள் திரண்டனர்.
நாளை காய்கறி கடைகள் இயங்காது என்பதால் கோயம்பேடு காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று பிற்பகல் வரை மட்டுமே சந்தை இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் நூற்றுக்கணக்கானோர் காய்கறி வாங்க ஆர்வம் காட்டினர்.
நாளை முழு ஊரடங்கு நடைமுறைக்கு வரும் நிலையில் சேலத்தில் உள்ள காய்கறிக் கடைகளில் மக்கள் கூட்டம் களைகட்டியது. அப்போது, பலர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் காய்கறி வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு காய்கறி சந்தைகளிலும் இறைச்சிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.