ஆப்பிள் நிறுவன தொழில்நுட்பத்தின் பிழைகளை பொறியாளர்கள் குழு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இக்குழுவின் தலைவரான தமிழர் ஜோசப் ரவிச்சந்திரனுக்கு மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இது தகவல் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் காலம். தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கிய தூண்களாக இருப்பவை கணினிகள் மற்றும் அலைபேசிகள்தான். அந்த கணினிகள்,அலைபேசிகளுள் ஆப்பிள் நிறுவனப் பொருட்களுக்கு இருக்கும் இடம் மிக தனித்துவமானது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆப்பிள் நிறுவனத்தின் Macbook கணினி, Iphone அலைபேசி என அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அத்தனைக்கும் தகவல் தொழில்நுட்ப சந்தையில் மிக உயரிய இடம் இருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் Macbook கணினிதான் இருப்பதிலேயே மிக பாதுகாப்பானது. அதில் இருக்கும் தகவல்களை திருடுவது அதாவது Hacking செய்வது மிக மிகக் கடினம். அதற்குக் காரணம் அதில் இருக்கும் தொழில்நுட்பம்.
“எங்கள் கணினியில் M1 என்ற ஒரு சிப் இருக்கிறது. அதில் PAC அதாவது Pointer Authentication Code எனும் ஒரு தொழில்நுட்பம் இருக்கிறது. Mac bookல் இருக்கும் எந்த பாதுகாப்பு அம்சமும் பழுதுபட்டாலும், இந்த PAC மட்டும் பழுதாகாது. அதனால் Macbookல் இருக்கும் தகவல்களை, எவராலும் திருட முடியாது.” என்று ஆப்பிள் நிறுவனம் கருதிக் கொண்டு இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருக்கும் புகழ்பெற்ற Massachusetts Institute Of Technology என்ற பல்கலைக்கழகத்தில், Computer Science and Artificial Intelligence Lab துறையைச் சார்ந்த நான்கு பொறியாளர்கள் அடங்கிய குழு ஒன்று, Macbookல் இருக்கும் தகவல்களை Hack செய்து விடலாம், அதைத் தடுக்கும் ஆயுதம் என அந்த நிறுவனம் கருதும் M1 சிப்பில் இருக்கும் PAC மென்பொருளையும், தாங்கள் கண்டுபிடித்துள்ள PACMAN என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏமாற்றி விடலாம் என்று தங்கள் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்துள்ளனர்.
அந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவின் அறிக்கையை ஆப்பிள் நிறுவனமும் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இறுதியில் அதை ஏற்றுக் கொண்டது.
கடந்த ஜூன் 18ல் அமெரிக்காவில் நடைபெற்ற International Symposium of Computer Architectureல் MIT பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்ததைப் பற்றி பேசினர்.
ஆப்பிள் Macbookல் இருக்கும் இந்த பழுதை கண்டுபிடித்துச் சொன்ன அந்த 4 பேர்கள் அடங்கிய குழுவின் தலைவராக இருப்பவர் ஒரு தமிழர். அவரது பெயர் ஜோசப் ரவிச்சந்திரன். வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேம்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்புக்காக அம்சங்கள் குறித்து விரிவான ஒரு அறிக்கையை அந்த கூட்டத்தில் ஜோசப் ரவிச்சந்திரன் பேசினார்.
சரி….யார் இந்த ஜோசப் ரவிச்சந்திரன்? இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த, நீதியரசர் அமரர் திரு.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பேரன்தான் இந்த ஜோசப் ரவிச்சந்திரன். மக்கள் தலைவர் வைகோ தன் வழக்கறிஞர் படிப்பை முடித்து விட்டு, நீதியரசர் அமரர் ரத்தினவேல் பாண்டியன் அவர்களிடம்தான் ஜூனியராக பணியாற்றினார்.
ஜோசப் ரவிச்சந்திரன் அவர்களின் தந்தையாரும், நீதியரசர் அமரர் ரத்தினவேல் பாண்டியனின் மகனுமான ரவிச்சந்திரன் அவர்கள், சென்னை MEPZ ,(Madras Export Processing Zone)ல் நடத்தி வந்த, India Comnet International என்ற மென்பொருள் நிறுவனத்தில்தான், நான் கல்லூரி படிப்பை முடித்து விட்டு,மேலாளராக கிட்டத்தட்ட 7 வருடங்கள் பணியில் இருந்தேன்.
இப்படியான பெரும் பெயரும், புகழும், பாரம்பரியமும் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் ஜோசப் ரவிச்சந்திரன் அவர்களின் அளப்பரிய சேவை தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து ஓங்கி வளர்ந்திட, இந்தத் துறையில் உச்சம் தொட, என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.