தன்னிடம் இருந்து விலகிய காதலியை கத்தியால் குத்திய இளைஞர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் விநாயகபுரம் மாதவன் நகர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் சுதாகர் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் சுதாகரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்தப் பெண் அவரை விட்டு விலகியுள்ளார். சுதாகர் வழியே சென்று பேச முயன்றபோதும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் சுதாகர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
ஒரு நாள் இரவு அப்பெண்ணின் வீட்டுக்கு அருகே சுதாகர் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது வெளியே வந்த இளம்பெண்ணிடம், ஏன் என்னிடம் பேசுவதில்லை எனக் கேட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் அவரிடம் இருந்து விலகிச் செல்ல முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கே அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புழல் காவல் நிலைய போலீசார் சுதாகரை தேடி வந்தனர். இதையறிந்த சுதாகர், சென்னை மாதவரம் பகுதியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்
கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.







