30.9 C
Chennai
May 13, 2024
முக்கியச் செய்திகள் செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

மத்தியில் காங்கிரஸ்,  பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் மத்திய,  மாநில அரசுகளை வலியுறுத்தி 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது:

பொன்விழா எழுச்சி அதிமுக மாநாடு மதுரை மாநகரம் குலுங்கும் அளவுக்கு நடந்தது.  15 லட்சம் பேர் கலந்து கொண்டு வெற்றி மாநாடாக நடத்தினோம்.  எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மாநாடு நடைபெற்றது.  விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி,  அதிமுக மாநாட்டை விமர்சித்தார்.  அதிமுக மாநாடு போல,  திமுக மாநாடு இருக்காது எடுத்துக்காட்டாக சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநாடு இருக்கும் என்றார். சொன்னதிலிருந்து மூன்று முறை தேதி மாற்றப்பட்டு விட்டது.  அதிமுகவை விமர்சித்ததற்கே இந்த நிலை.

முழுமையான வாகனங்கள் கிடைத்து இருந்தால் இன்னும் 10 லட்சம் பேர் வரை மாநாட்டில் பங்கேற்றிருப்பார்கள்.  அதிமுக மாநாட்டை பற்றி விமர்சனம் செய்ய உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.  அதிமுக கட்சியை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது , தீய சக்தி திமுகவை அழிக்கதான் எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கினார்.

அதிமுக மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி,  ஜெயலலிதா மறைவுக்கு பின் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.  சோதனை மேல் சோதனையை சந்தித்து அத்தனையும் படிகட்டாக மாற்றி சாதித்ததும் அதிமுக கட்சி தான்.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எனக்கு பிறகும் சிறப்பாக கட்சி இயங்கும் என சொன்னது போல் நம் கட்சி செயல்படுகிறது.

சாதனை மேல் சாதனை செய்து மக்கள் கொண்டாடும் கட்சியாக அதிமுக உள்ளது. மு.க.ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் தான் ஊழல் இருந்தது என்று குறை சொல்வார்,  இப்போது யார் ஊழல் குற்றம் செய்தார் என்று தெரியும்.  நல்ல அரசாட்சி தரும் முதலமைச்சர் நினைத்தால் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கலாம்,  நீதிமன்றம் சொல்லியும் இன்று வரை அதை செய்யவில்லை.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் பேசுகிறார்,  நாள்தோறும் காலையில் யாரும் எந்த புது பிரச்சனையும் உருவாக்கி விட கூடாது என்று கண் விழிக்கிறேன் என்று முதலமைச்சர் சொல்கிறார்.  அவருடைய கட்சியையே அவரால் பார்த்துக் கொள்ள முடியவில்லை,  அவர் எப்படி தமிழக மக்களை பார்த்துக் கொள்வார்.

இவருக்கு கட்சியும் நடத்த தெரியவில்லை ஆட்சியும் நடத்த தெரியவில்லை.  திமுக அரசாங்கத்திற்கு இறங்கு முகம் தொடங்கிவிட்டது,  பொதுமக்கள் திமுக ஆட்சி எப்போது போய்,  மீண்டும் அதிமுக ஆட்சி வரும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சட்டஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது,  பாலியல் வன் கொடுமை நடக்கிறது. விவசாயிகள் மிக துன்பத்திற்கு ஆளாகி உள்ளனர்.  புயல் தாக்கத்தால் அதிக பாதிப்பு அடைந்தனர்.  5 லட்ச ஏக்கர் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தார்கள். அதற்கு ஏற்ற தண்ணீர் தர வேண்டாமா? இவர் பேச்சை கேட்டுதானே நடவு செய்தார்கள்.

அதிமுக ஆட்சியில் பேரிடர் காலத்தில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ரூ.20,000 கொடுத்தோம்.  தேசிய பேரிடர் கொடுக்க சொன்ன தொகையை விட குறைவான தொகையை தான் தற்போதைய மாநில அரசு விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு அரசு அநீதி இழைக்கிறது வஞ்சிக்கிறது.  சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அகிம்சை முறையில் போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்த அரசாங்கத்திற்கு,  நாடாளுமன்ற தேர்தலில் பதில் கிடைக்கும்.

சென்னையில் 15 மண்டலத்திற்கும் அனுபவம் வாய்ந்த மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்து ஒரு வாரம் முன்பே நேரில் சென்று ஆராய்ந்து செயல்பட்டதால் அதிமுக ஆட்சியில் பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டது.  1400 மின் மோட்டார்களை வைத்து எந்த பகுதியில் நீர் தேங்கும் என்று பார்த்து உடனுக்குடன் நீரை வெளியேற்றி சிறப்பாக செயல்பட்டோம்.  அம்மா உணவகத்தில் உணவு வழங்கினோம்,  அரசியல் காழ்ப்புணர்சியில் அம்மா உணவகத்தை மூடியதால் இன்று மக்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் 14 ஆம் தேதியே அறிவித்துவிட்டது.  இந்த அரசு தூங்கி கொண்டு இருந்ததால் மக்கள் பாதித்து உள்ளனர்.  இன்று வரை தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை நீர் வடியவில்லை, எட்டு நாட்கள் ஆகியும் விடிவு காலம் பிறக்கவில்லை.  19 ஆம் தேதி நான் சென்ற போது எல்லா பகுதிகளிலும் நீர் சூழ்ந்து காணப்பட்டது.

ஓட்டு போட்ட மக்கள் பசியால் துடித்துக் கொண்டு உள்ளனர், ஆனால் முதலமைச்சர் டெல்லிக்கு சென்றார்.  வாக்களித்த மக்களை பார்க்க நேரம் இல்லை.  ஆட்சியை காப்பாற்றுவதற்காக இந்தியா கூட்டணியில் கலந்து கொண்டார்.  ஓட்டு போட்ட மக்கள் துன்பத்தில் உள்ளனர்.  அவர்களை அதில் இருந்து விடுவிக்கவில்லை.

ஸ்டாலின் வந்தாரு நீச்சல் அடிக்கவிட்டாரு என்று மழைநீர் தேங்கிய நீரில் நடந்து கொண்டு ஒரு பெண்மணி தெரிவித்ததை பார்க்க முடிந்தது.  வெள்ளத்தால் விலை மதிக்க முடியாத உயிரை இழந்து உள்ளோம்.  காயல்பட்டினம் பகுதியில் 110 சென்டி மீட்டர் மேல் மழை பெய்ததால் இன்று வரை மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மக்கள் பிரச்னையை அரசியல் ஆக்க கூடாது,  மத்திய அரசை குறை சொல்லி மாநில அரசு தப்பித்து கொள்ள கூடாது.  மத்திய அரசும் நிதியளிக்க வேண்டும் என்று தீர்மானத்தில் சொல்லி உள்ளோம்.  உங்களை போல் மக்களை கவனிக்காத கட்சி அல்ல. கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுத்ததாக எந்த சரித்திரமும் கிடையாது.

மத்தியில் காங்கிரஸ்,  பாஜக யார் ஆண்டாலும் சரி மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ஏற்ப மத்திய அரசு பேரிடர் காலங்களில் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  திமுக தலைவர் எப்போதும் தமிழ் தமிழ் என்று பேசுவார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஏன் பேசவில்லை.

தேசிய கட்சிகளை நம்பி இன்று பிரயோஜனம் இல்லை,  அதிமுகவை பொறுத்தவரை வாக்களிக்கும் மக்கள் தான் முக்கியம்.  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் காவிரி பிரச்சனையின் போது 22 நாட்கள் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து பேசினார்.  அதற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து ஒத்தி வைக்க முடியுமா? அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகி விட்ட பின் ஸ்டாலினுக்கு தூக்கம் போச்சு, சிறுபான்மையின மக்களுக்கு ஆட்சியில் ஒன்றும் செய்யவில்லை.  அவர்கள் ஓட்டு சிதறிவிடும் என்று அஞ்சுகிறார்.  ஏற்கனவே தெரிவித்தது போல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தி விட்டோம்.

திமுக அரசு குழு அரசாங்கம் எதற்கு எடுத்தாலும் குழு போடுவது தான் வேலை. போக்குவரத்து,  மின்துறை,  உயர்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளில் தேசிய விருதுகள் பெற்று உள்ளோம்.  இந்த ஆட்சியில் எந்த பெரிய திட்டமாவது கொண்டு வந்து இருக்கிறீர்களா? அதிமுக ஆட்சிக்கு முன் நூற்றுக்கு 34 பேர் தான் உயர்கல்வி படித்தனர், இப்போது கடை கோடி மக்கள் கூட உயர்கல்வி படிக்க ஏற்பாடு செய்தோம், இப்போது 52 க்கு மேல் உள்ளவர்கள் படிக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினை கேட்கிறேன், உங்க தாத்தாவுக்கு பேனா வைக்கிறதுக்கு பணம் எங்க இருந்து வந்தது,  கடலில் 89 கோடியில் எழுதாத பேனாவை வைக்கிறார்கள். கஷ்டப்படும் மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை, அரசு பணத்தில் குடும்பத்திற்கு நினைவாக பேனா வைக்கிறார். ஃபார்முலா ரேஸ்காக சாலையை யார் விட்டு பணத்தில் சீரமைத்து வருகிறார்.

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading