கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் அணுக் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டுமென்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கூடங்குளத்தில், அணு மின் உலைகளிலிருந்து உருவாகும் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே சேமித்து வைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் ஆபத்து ஏற்படும் என்பதால் தமிழக மக்கள் ஆழ்ந்த கவலையும், அச்சமும் அடைந்துள்ளதாகவும், மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் இத்தகைய முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அணுமின் நிலைய வளாகத்திற்குள் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேமித்து வைத்திடும் வசதியை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் பாதுகாப்பு, சுகாதாரத்தை கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆழ்நிலை கிடங்கு அமைத்து, அணுக் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம் என்றும், தமிழ்நாட்டிலுள்ள எட்டு கோடி மக்களின் சார்பாக இத்தகைய வேண்டுகோளை விடுப்பதாகவும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.