புதுச்சேரியில் பாஜகவின் நியமன சட்டமன்ற உறுப்பினரும், மாநில பாஜக பொருளாளருமான சங்கர் மாரடைப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார்.
புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளராக இருப்பவர் சங்கர்(72), கடந்த 2017ஆம் ஆண்டு பாஜகவின் நியமன சட்டமன்ற உறுப்பினராக புதுச்சேரி சட்டமன்றத்திற்கு தேர்வானர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள சங்கர் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காந்தி நகரில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகள், மகன் உள்ளனர்,
இறந்த சங்கரின் உடலுக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் சட்டமன்ற உறுப்பினரின் மறைவையொட்டி புதுச்சேரி பாஜக சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மாநில தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.







