சமூக வலைதளத்தை உபயோகித்தற்கு பெற்றோர்கள் கண்டித்ததையடுத்து 13 வயது சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு காலத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. இதனால் அனைத்து சிறுவர்களும் அலைப்பேசியை கட்டாயம் உபயோகப்படுத்தும் சூழல் உருவானது. அதோடு மட்டுமல்லாமல், வகுப்புகள் இல்லாத நேரங்களில் சமூக வலைதளங்களையும் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோயம்புத்தூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பு இல்லாத நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்கும் அவர் அதிக நேரத்தை இன்ஸ்டாகிராமில் செலவிட்ட நிலையில் அவரின் பெற்றோர் கண்டித்திருக்கின்றார். பெற்றோரின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி தனது சக இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனம்விட்டு பேசியிருக்கின்றார்.
இந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி வீட்டிற்கு திரும்பாத நிலையில், பெற்றோர் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் . இந்த புகாரையடுத்து மகளிர் போலிசார் சிறுமியின் பின்புலத்தை அறிந்து சிறுமி நகர்வை நவீன முறையில் பின் தொடர்ந்தனர்.
சிறுமியை அவரின் தோழியுடன் இன்ஸ்டாகிராமில் பேச வைத்து, சிறுமி ரயிலில் பயணித்துக் கொண்டிருப்பதனை உறுதி செய்தனர். அவர்கள் உரையாடிய போது பதிவான வீடியோவில் ஒரு இடத்தில் ரயில் வண்டி எண் பொறித்ததனை பார்த்த போலிசார் அதனை வைத்து கோயமுத்தூர் – சென்னை விரைவு ரயில் என்பதனை அறிந்து கொண்டனர்.
இதையடுத்து, சிறுமி உபயோகிக்கும் அலைபேசியின் ஜி பி எஸ் சிக்னலை வைத்து அரக்கோணம் அருகே சிறுமி செல்வதனை உறுதி செய்து ரயில்வே போலிசாரிடம் தெரிவித்தனர். அரக்கோணம் ரயில்வே போலிசாருக்கு சிறுமியின் புகைப்படமும், சிறுமியின் உடை அடையாளம் குறித்த தகவல்களும் அளிக்கப்பட்டது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிறுமியை போலிசார் மீட்டு கோயம்புத்தூர் போலிசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, சிறுமியிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான சிறுமி ஒருவர் சென்னையில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருப்பதனை அறிந்து கொண்டு கோயம்புத்தூர் சிறுமி அவருடன் தங்க முடிவு செய்திருக்கிறார். பெற்றோரின் கண்டிப்புக்கு பயந்து சிறுமி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அதன்படி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி சக இன்ஸ்டாகிராம் தோழியுடன் விடுதியில் தங்க முடிவெடுத்து ரெயில் பயணித்திருக்கின்றார்.
இன்ஸ்டாகிராமில் மூழ்கிய சிறுமியை கண்டித்த பெற்றோருக்கு பதிலடியாக சிறூமி வீட்டை விட்டு வெளியேறியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த நிலையில் சிறார்களை கவனமுடன் கையாள வேண்டிய நிலைக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
சமூக வளைதளத்தை நல்ல முறையில் பயன்படுத்த மாணாக்கர்களை நல்வழிப்படுத்த உரிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளுக்கும் தேவைப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.