வேற்றுமையில், ஒற்றுமை காண்பது தான் இந்தியா என்பதை உணர்த்தும் விதமாக, ஆளுநரின் பேச்சு உள்ளதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்காசி அருகே உள்ள காசி தர்மம் என்ற கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனவும், இந்த அரசை நம்பி மக்கள் ஏமாற்றத்துடன் தற்போது நிற்பதாகக் குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு ஆளுநரின் கருத்து வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்திய நாட்டின் கலாச்சாரம் என்பதை விளக்குவது போல் தான் உள்ளது, அதைத்தான் அவர்கள் வலியுறுத்தி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் எனவும், இதற்கு மாறுபட்ட கருத்துகளைத் திணிப்பது நல்லதல்ல எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசு மீது கூறும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது எனத் தெரிவித்த ஜி.கே.வாசன், அண்ணாமலை கூறும் கருத்துக்கள் அனைத்தும் பொது நலனை அடிப்படையாக உள்ளது எனவும், தமிழ்நாடு அரசின் திட்டமிடல் சரியில்லை என்பதைத் தான் பாஜக தலைவர் தொடர்ந்து கூறி வருவதாகத் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘அரசியல் என்பது வியாபாரம் அல்ல: நடிகர் கமல் ஹாசன்’
மேலும், தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பது கவலைக்கிடமான நிலையில் உள்ளது எனவும், குற்ற வழக்குகளில் முறையான விசாரணை நடத்திய பிறகே தவறு செய்தவர்கள் யார் என்பது தெரியவரும் ஆனால், விசாரணை செய்வதற்கு முன்பே கண்மூடித்தனமாகத் தாக்குவது என்பது ஏற்புடையது அல்ல இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.