காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பேட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஜா தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார்.
கடந்த மாதம் தொடங்கி இம்மாத தொடக்கத்தில் நிறைவு பெற்ற கான்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் கனடா வீராங்கனை மிச்செல் லியை எதிர்கொண்ட சிந்து, பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் கனடா வீராங்கனை மிச்செல் லியை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.
இதற்கு முன்பு கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் கலப்புப் பிரிவில் சிந்து தங்கம் வென்றிருந்தார். தனிநபர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் இதுவே அவர் வென்ற முதல் தங்கப் பதக்கம் ஆகும். 2018 காமன்வெல்த்தில் தனிநபர் பிரிவில் வெள்ளியும், 2014 கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெண்கலமும் வென்றார்.
தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், அமைச்சர் ரோஜா கணவரும், திரைப்பட இயக்குநருமான செல்வமணி, மகன் கிருஷ்ணா லோகித் செல்வமணி, மகள் அன்ஷுமாலிகா செல்வமணி ஆகியோருடன் பேட்மிண்டன் நட்சத்திரம் பி.வி.சிந்துவை சந்தித்தார்.
இதுதொடர்பாக முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பி.வி.சிந்துவை இன்று சந்தித்தேன். காமன்வெல்த்தில் முதல் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் சிந்து. அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆந்திர அரசு அளித்த ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி கூறினார். அவர் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.