சென்னை அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இத தொடர்பாக புகார்கள் குவிந்ததை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அம்பத்தூர் காவல் துணை ஆணையருக்கு சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தீபா சத்தியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர் தேடுதல் வேட்டையில் புறா கார்த்தி சிக்கினார்.
கொரட்டூர் வன சக்தி நகரில் செயின் பறிப்பின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை முதலில் ஆய்வு செய்த தனிப்படை போலீசார் அதன் மூலம் குற்றவாளியைத் தேடத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக சென்னை புறநகர் வழியாக செல்லும் சிசிடிவி காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். சுமார் 300 கிலோ மீட்டருக்கு மேல் குற்றவாளியை பின் தொடர்ந்தனர். ஒருவழியாக ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையம் பகுதியில் மறைந்து இருந்த நபரை கைது செய்து கொரட்டூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் மேலும் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரிய வந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த புறா கார்த்திக் மீது ஒரு கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி வழக்குகள் என மொத்தம் 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சென்னையில் இரண்டு மனைவிகள், நான்கு குழந்தைகள், ஈரோட்டில் ஒரு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் என மூன்று மனைவி ஆறு குழந்தைகளுடன் மன்மத ராஜாவாகவே புறா கார்த்தி வாழ்ந்து வந்துள்ளார். திருட்டு வழக்கில் கைது செய்யப்படுவதும் இரண்டு மூன்று மாதங்களில் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் புறா கார்த்திக்கு கைவந்த கலையாக இருந்துள்ளது.
சென்னை டூ ஈரோடு, ஈரோடு டூ சென்னை எனப் பறந்து பறந்து குற்றச் செயல்களை அரங்கேற்றிய புறா கார்த்தியை 700 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா காட்சிகளைப் போல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. அவரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.