இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்தார்.
சென்னை தி.நகர் ஷா சூன் ஜெயின் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ட்ரிக்கர் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் அதர்வா, இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளர் ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவிகள் உற்சாகமாக வரவேற்பு அளிக்க விருந்தினர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
தயாரிப்பாளர் ஸ்ருதி கூறுகயைில், “பெண் தயாரிப்பாளராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. தென்னிந்திய சினிமாவில் குறைந்த பெண் தயாரிப்பாளர்கள் மட்டுமே உள்ளனர்” என்றார்.
இயக்குனர் சாம் ஆண்டன் பேசுகையில், “நான் கல்லூரிக்கு சென்று ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. கூர்கா படத்திற்கு பிறகு ஒரு ஆக்ஷன் படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். அதனால் அதர்வாவை வைத்து இந்தப் படம் எடுத்தேன். இந்தப் படம் எழுதும் போது இதை அதர்வா மனதில் வைத்து தான் இந்த படத்தை எழுதினேன்” என்றார்.
நடிகர் அதர்வா கூறுகையில், “இதுபோன்ற கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு சென்றாலே எனர்ஜி வந்து விடும். வீட்டுக்குச் சென்ற பிறகு எனது கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும். இது மற்ற படங்களைப் போல சாதாரண ஆக்ஷன் படமாக இருக்காது. கல்லூரி மாணவன் போன்ற கதாபாத்திரத்தில் விரைவில் நடிக்க உள்ளேன். அதற்கான கதையை கேட்டுள்ளேன். விரைவில் அது நடக்கும். இப்போதைக்கு கல்யாணம் பண்ணும் எண்ணம் இல்லை. நான் என் கல்யாணத்தின்போது அழ மாட்டேன்.
கதையை கேட்கும் போது நான் எனக்காக கதையை கேட்ட மாட்டேன். ஒரு ரசிகனாக தான் அந்த கதையை கேட்பேன். தினமும் நிறைய சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள் வருகின்றனர். இவர்களுடன் தான் வேலை செய்ய வேண்டும் என்று ஒருவரை சொல்ல முடியாது. நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். சமீபத்தில் நான் பார்த்த விக்ரம் படம் எனக்கு மிகவும் பிடித்தது” என்றார்.






