“யாதும் ஊரே யாவரும் கேளீர்”….தமிழ் மொழியின் பெருமை கூறி நெகிழ்ந்த திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்த திரௌபதி முர்மு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரிடையே பேசும் போது தமிழ் மொழியின் சிறப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார்.  வரும் 18ந்தேதி நடைபெற…

குடியரசு தலைவர் தேர்தலில் தமக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னை வந்த திரௌபதி முர்மு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரிடையே பேசும் போது தமிழ் மொழியின் சிறப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசினார். 

வரும் 18ந்தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். ஒவ்வொரு மாநிலமாக சென்று அவர் ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் சென்னை வந்த அவருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த ஆதரவு திரட்டும் நிகழ்வில் பேசிய திரௌபதி முர்மு,  பழம்பெருமை மிக்க, வரலாற்று சிறப்பு மிக்க தமிழ்நாட்டுக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி என்று கூறினார். தமிழ் மொழி  மற்றும் திருக்குறளின் பெருமையை குறிப்பிட்டு பேசிய  திரௌபதி முர்மு, ”யாதும் ஊரே…யாவரும் கேளீர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளையும் குறிப்பிட்டு நெகிழ்ந்தார்.

இந்தியாவின் சுதந்திரத்தில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு வீரர்களும் முக்கிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்ட  அவர், ஆன்மீக சிறப்புகள் மிக்க  மாநிலம் தமிழ்நாடு எனவும் தனது உரையில் கூறினார்.ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் தமிழ்நாடு என்று கூறி தனது உரையை திரௌபதி முர்மு நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் தலைசிறந்த குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு இருப்பார் என்று நம்பிக்கை வைத்து அவரை வேட்பாளராக பிரதமர் மோடி அறிவித்துள்ளதாகக் கூறினார். பழங்குடி சமூகத்தில் இருந்து முதல்முறையாக குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளரான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல்,  சமூக நீதி, திராவிட மாடல் என்று கூறி மக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திரௌபதி முர்முவுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் அனைவரும் முழு மனதாக ஆதரவளித்து அவரை வெற்றி பெறச்செய்வார்கள் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி பழனிசாமி சென்ற பிறகு அரங்கிற்கு வந்து திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளித்து பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் திரௌபதி முர்முவை  பார்த்து மிகுந்த மகிழ்ச்சியாக அடைந்திருப்பார் எனக் கூறினார்.  குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டது, பெண்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடிக்கு உள்ள தொலைநோக்கு சிந்தனையையே காட்டுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டினார்.

நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தவைவர்கள் பலர் பங்கேற்று திரௌபதி முர்முவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக புதுச்சேரி சென்ற திரௌபதி முர்மு அம்மாநில முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.